
கருங்குளம் அருகே காமராஜர் சிலையை ஓலையில் செய்து அசத்திய பனை தொழிலாளி பற்றிய விவரம் வருமாறு.
கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி(65). இவர் பனை தொழிலாளி. இவர் கடந்த வருடம் பனை ஓலையில் இருந்து ஆலயம், தாஜ்மகால், கோபுரம், யானை, ஒட்டகம் உள்பட பல பொருள்களை உருவாக்கி இருந்தனார். இதனால் அவருக்கு மதுரை திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் கிடைத்தது. இதற்கிடையில் இவர் 7 அடி உயரத்தில் காமராஜர் சிலையை பனை ஓலையில் செய்தார். இவர் காமராஜர் சிலைக்கு சட்டை, வேஷ்டி, கழுத்தில் போடப்பட்டிருக்கும் சந்தன மாலை கூட பனை ஓலை மூலமாகவே செய்தார். தற்போது தனது வீட்டு வாயிலில் அவர் பனை ஓலையால் செய்யப்பட்ட காமராஜரை பார்வைக்கு வைத்துள்ளார். இதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.
இது குறித்து பால்பாண்டி கூறும் போது, நான் சிறு வயது முதலே பனை தொழில் புரிவதில் ஆர்வமாக இருந்தேன். பனை ஏறி பதனீர் இறக்கி வந்தேன். ஒரு விபத்தின் போது என்னால் பனை ஏற முடியவில்லை. எனவே பனை ஓலையில் இருந்து பொருள்கள் செய்யும் பணியை சிறப்பாக செய்து வந்தேன். ஓலை பெட்டி, நார் பெட்டி போன்றவை செய்து கொண்டிருந்த எனக்கு தாஜ்மகால், கோபுரம், ஆலயம், யானை, ராக்கெட், ஒட்டகம் போன்ற பொருள் செய்ய ஆசைபட்டேன். அதன் முயற்சி வீண் போகவில்லை. கடந்த பொங்கலை யொட்டி ஏர்கலப்பை, ஏர் உழவன், உழத்தி போன்றவர்கள் உருவம் செய்து சந்தோஷப்பட்டேன். தற்போது நான் விரும்பும் தலைவர் காமராஜர் உருவத்தினை பனை ஓலையில் செய்ய ஆசைப்பட்டேன். இதற்காக கடந்த 3 மாத காலமாக பணியாற்றினேன். அதன் விளைவாக தற்போது 7 அடி காமராஜர் உருவத்தினை பனை ஓலையில் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளேன் என்றார்.
இதுபோன்ற பனை தொழிலாளிகள் பலர் உள்ளனர். இவர்களுக்கு போதிய வாழ்வாதராம் இல்லை. எனவே இவர்கள் பிரச்சனை தீர்க்க, இவர்களை ஊக்கப்படுத்த அரசு முன்வரவேண்டும். இதுபோன்ற தொழிலை சந்தை படுத்துவும், தொழில் செய்பவர்களை ஊக்கப்படுத்தவும் முன்வர வேண்டும் என பனை தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.