திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில், 194-ஆவது வைகுண்டர் ஆண்டு ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கடந்த ஜூலை 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 11-ஆம் நாளான நேற்று (திங்கள்கிழமை) முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் உகப்படிப்பு, பணிவிடை மற்றும் உச்சிப்படிப்பு ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிற்பகலில் அய்யா வைகுண்டர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பதியைச் சுற்றிப் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுருள் வைத்து வழிபட்டனர்.
தேரோட்டத்தை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், நான்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வடம்பிடித்துத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பதியைச் சுற்றிப் பவனி வந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை:
தேரோட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நான்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் தெரிவித்ததாவது: “அய்யா வைகுண்டர் அவதார நாள் விழாவிற்குத் தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அய்யாவழி பக்தர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வசிப்பதால், வைகுண்டர் அவதார நாளில் மாநிலம் முழுவதும் அரசுப் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.


