திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட 14 வயது சிறுவனை, கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர் சாதுரியமாக மீட்பை மேற்கொண்டு பத்திரமாக மீட்டார்.
திருச்செந்தூர் கோவில் பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. கடந்த 12-ஆம் தேதி ஆடி அமாவாசையன்று காலையில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.இந்நிலையில் நேற்று காலையில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
இருப்பினும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி வந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த சரண் (14) என்ற சிறுவன், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தான். பின்னர் தனது நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் தத்தளித்துள்ளான்.
சிறுவன் தத்தளிப்பதைக் கண்ட கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர் சிவராஜா, உடனடியாகக் கடலில் குதித்துச் சிறுவன் சரணைப் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். அப்பகுதி பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், மீட்பு நடவடிக்கையின் போது இருவருக்கும் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து இருவருக்கும் கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலில் தத்தளித்த சிறுவனைச் சாதுரியமாக மீட்ட பாதுகாப்புப் பணியாளர் சிவராஜாவை கோவில் அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.


