தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவல்துறையை, தாலுகா காவல்துறையாகப் பணி மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 69 காவலர்கள் தாலுகா காவலர்களாக நியமனம் செய்து, அவர்களுக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களின் அடிப்படையிலும், அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்துக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், அச்சுப்பணி காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், நம்பிராஜன், உதவியாளர்கள் கதிரேசன், செந்தில் விநாயகப் பெருமாள், இளநிலை உதவியாளர் பெரியசாமி ஆகியோர் அடங்கிய குழுவினரால் கலந்தாய்வு நடத்தப்பட்டு, விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்குப் பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர்.
மேற்படி மாறுதலில் தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திற்கு 5 காவலர்களும், மணியாச்சி உட்கோட்டத்திற்கு 10 காவலர்களும், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு 19 காவலர்களும், ஸ்ரீ வைகுண்டம் உட்கோட்டத்திற்கு 12 காவலர்களும், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு 18 காவலர்களும், விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு 5 காவலர்களும் மொத்தம் 69 காவலர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்குக் கூடுதலாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் விரைந்து தீர்வு காண்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், ராபின்சிங் கென்னடி உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


