தட்டார்மடம் பகுதியில் சிறுவர்களின் அதிவேக பைக் சாகசங்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புதிய காவல் ஆய்வாளரிடம் நேரில் முறையிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள அருளப்பனை, சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் லூர்து மணி தலைமையில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வகுமார், செயலாளர் பெரியசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர் உதயமணி ஆகியோர் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சந்திப்பின் போது விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காவல் ஆய்வாளரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: தட்டார்மடம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவது போல் அதிவேகமாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுவதோடு, பொதுமக்களுக்கும் கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தட்டார்மடம் பகுதியில் கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் லாட்டரி, சூதாட்டம் போன்ற சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. காவல்துறையினர் தினசரி ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி இவற்றைக் முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளைக் கேட்டறிந்த காவல் ஆய்வாளர் அருளப்பன், இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


