
லக்னோவில் உள்ள தொல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு மைய ஆய்வாளர்கள், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்ட பணியாகக் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி முதல் 2 மாத காலமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடத்தில் அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் 200 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட சுண்ணாம்பு தளம், 2000 ஆண்டுகள் பழமையான சங்க கால வாழ் விடப்பகுதிகள், மூன்று அடுக்கு முதுமக்கள் தாழிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தினை பல்வேறு துறை சார்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லக்னோவில் உள்ள பழைய பீர்பால் தொல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள் ஆதிச்சநல்லூர் வருகை தந்தனர். இந்த குழுவில் வெப்ப உமிழ்வு கால கணிப்பு ஆய்வாளர் மொர்தகாய் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று அடுக்கு முதுமக்கள் தாழிகளைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த தாழிகள் எந்த கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது. எப்போது புதைக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள ஆய்வு மேற்கொண்டார். இதற்கான பொருள்களை சேகரித்தார். அதே போல் லக்னோ ஆய்வக மகரந்த தூள் ஆய்வாளர் அஞ்சலி திரிவேதி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ளே உள்ள பொருட்களைச் சேகரித்து, அதில் உள்ள தாவரங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்கிறார். முதுமக்கள் தாழியின் உள் கிடைக்கும் தானியங்களைச் சேகரித்து அதனுள் இருக்கும் மகரந்த தூள் மூலம் இதன் கால கட்டத்தை அறிய முடியும் என்று தெரிவித்தார். அவருடன் ஆய்வு மாணவி பிரியங்கா உடன் வந்திருந்தார்.