விஜய் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கேப்டன் தனித்து தேர்தல் களத்தில் போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டோம். அதே போல கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்க வரிவிதிப்பில் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபடும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே நமது நாட்டில் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் அமெரிக்காவின் இந்த வரி உயர்வால் இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவிடம் பேசி பிரதமர் சரி செய்து நமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், முதல்வர் ராகுல் காந்தியுடன் நடைபயணம் சென்றது குறித்த கேள்விக்கு, “அவர்கள் வெற்றி பெற்றால் அது நல்ல தேர்தல். வெற்றி பெறவில்லை என்றால் பல பிரச்சனைகள் இருக்கிறது, வாக்கு திருட்டுக்கள் நடக்கிறது என்று சொல்கின்றனர் என்னைப பொறுத்தவரை நாங்களும் கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியா முழுவதும் 100 சதவீதம் சரியான தேர்தல் இன்றும் நடக்கவில்லை.
தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும். ஒரு மாநிலத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் சரி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் தான் இதற்கு சரியான முடிவு எடுத்து சொல்ல வேண்டும். இல்லை என்றால் தேர்தலில் நிற்பதே வேஸ்ட். தேர்தல் வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வருகிறது என்றவுடன் புதுசு புதுசா பல சொல்கின்றனர்.
கச்சத்தீவை நாம் எப்போது விட்டுக்கொடுத்தோமோ அப்போதே நமது மீனவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. கச்சத்தீவு மீட்பு தான் மீனவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு. இதை நிச்சயமாக இரண்டு நாடுகளும் ஐநாவிடம் பேசி முடிவெடுக்க வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும். நல்லது நடக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.


