கோவில்பட்டியில் ஆம்னி காரில் கடத்தி வந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, கார் ஓட்டுநரைக் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து கயத்தாறுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் திருநெல்வேலி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே சென்ற ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டபோது, ஓட்டுநரான மேலபாண்டவர்மங்கலம் அக்ரஹார தெருவைச் சேர்ந்த பூல்பாண்டி என்ற கொம்பையா மகன் பாண்டித்துரை (32) என்பவர் 1,100 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது. தூத்துக்குடி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரேஷன் அரிசி, வாகனம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து, பாண்டித்துரையைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


