தூத்துக்குடியில் இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு செவித்திறன் குறைபாடுள்ள மாணவ,மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் மாணவ மாணவிகள் சைகை மொழியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர். தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பிரம்ம நாயகம், காது கேளாதோர் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் மெய்கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
களைப்படைந்த குழந்தைகள்
தூத்துக்குடியில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. பேரணியை முன்னிட்டு குழந்தைகள் காலையிலேயே அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் மிகவும் களைப்பாக காணப்பட்டனர். பேரணி முடிந்த பின்னர் அவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் சிறு குழந்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


