மின்னணு குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டபோது குடும்பத் தலைவர்கள் மட்டுமே கைரேகை பதிவு செய்திருந்த நிலையில், தற்போது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையையும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்க்க, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த அக்டோபர் 2023 முதல் கைரேகை பதிவு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், முன்னுரிமைக் குடும்ப அட்டைகளில் 96.21 விழுக்காடு இ-கேஒய்சி (e-KYC) பணிகள் முடிந்துள்ளன.
இப்பணியை 100 விழுக்காடு நிறைவு செய்யும் பொருட்டு, ஆகஸ்ட் 29 சனிக்கிழமையன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுவரை கைரேகை பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


