தூத்துக்குடியில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புதிய அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தவெக தலைமையில் புதிய அரசு அமைந்ததில் இருந்து பல்வேறு வகையான விலைவாசிகள் தாறுமாறாக அதிகரித்துள்ளதாக இணையதளத்தில் தமிழக மக்கள் அதிர்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புதிய அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சிவராம் கூறுகையில், பல லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக தவெக ஆட்சியில்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு காரணம் தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் இந்த சலுகை 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தும் என அறிவித்திருந்தது.
அதேசமயம் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் மாத அடிப்படையில் மின் கட்டண கணக்கீடு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் இலவசம் என முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து தவெகவின் தேர்தல் வாக்குறுதி மீறப்பட்டதாக அல்லது மாற்றப்பட்டதாக அப்போதே பெரும் விமர்சனத்திற்குள்ளானது. மேலும் பழையபடி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்வதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.


