ஆதிச்சநல்லூர் தமிழ்நாட்டில் திருநெல்வேலிக்கு அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.
ஆரியப் படையெடுப்புக்கு முந்தைய தமிழ் நாகரிகம் இதுவாகும்.
இந்தியாவில் முதன் முதலில் 1876ல் அகழாய்வு செய்யப்பட்ட இடம்
ஆதிச்சநல்லூர் . இதன் பிறகே சிந்து வெளி நாகரிகம் அகழாய்வு செய்யப்பட்டது.
இதுவரை இரும்புக்காலம் என்று சொல்லப்பட்டுவந்த ஆதிச்சநல்லூர் சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி செம்புக்கற்காலம் என்றும் சொல்லும் வரையரைக்கு வந்துள்ளது -3000 – 5000 வருடங்கள் ( CHALCOLITHIC AGE )
2004 அகழாய்வில் ஆதிச்சநல்லூர் வெறும் இடுகாடு மட்டுமல்ல வரலாற்றுக்கு முந்தைய கனிமச்சுரங்கம் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கனிமச்சுரங்கச் செயல்பாடு 1500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்றிருக்கிறது
தமிழகத்தில் பொன் மற்றும் வெண்கலம் அதிக அளவில் கிடைத்த இடம் ஆதிச்சநல்லூரே. தங்கத்திலான நெற்றிப்பட்டம்(Diadem) அதிக அளவில் இங்கு மட்டுமே கிடைத்துள்ளது.
வெண்கலத் தாய்தெய்வப் படிமம் ஒன்றும் கிடைத்துள்ளது. 2004 அகழாய்வில் அதையொத்த தாய்த் தெய்வ சுடுமண் சிற்பம் ஒன்றும் கிடைத்துள்ளது- சிந்துவெளியின் நடனமங்கையை ஒத்திருக்கும் இச்சிற்பம் தமிழின் முதல் கதையாடல் சிற்பம் ஆகும். 3500 ஆண்டுகளுக்கு முன்னால் பொறிக்கப்பட்டது இத்தாய்த்தெய்வம்.
இங்கு கிடைத்த மண்டையோடுகள் அறுத்துத் திறந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்க – ஐரோப்பிய நாடுகளில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதே வகையான மண்டையோட்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன, ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகள் தென் இந்திய திராவிட மண்டை ஓடுகள் என்றும் தென் இந்தியப் பழங்குடிகளின் மண்டை ஓடுகளை ஒத்துள்ளது என அறிவியல் பூர்வமாக தெரிய வந்துள்ளது.
நிறைய வேளாண்கருவிகள் கிடைத்திருப்பது ஆதிச்சநல்லுரின் விவசாய வாழ்வியல் முறையை காட்டுகிறது. முதுமக்கள் தாழிகளில்
நெல் உமிகளும் கிடைத்துள்ளன.
மேலும் ஒரு தொகுப்பில் அதிகமான போர்க்கருவிகள் கிடைக்கின்றன. குதிரைகளுக்கு தேவையான அனைத்து தளவாடப் பொருட்களும் மொத்தமாக கிடைத்துள்ளன.
2004 அகழாய்வில் 180க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. அவை மூன்று அடுக்குகளில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது வேறு எங்குமே கிடைக்கவில்லை.
மேல்நிலை, இடைநிலை, கீழே என்று மூன்று அடுக்குகளில் கிடைத்துள்ளன. கீழே இருப்பது முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்ததாகவும், மேலே இருப்பவை அதற்கு அடுத்தடுத்த கால கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் கணிக்கப்பட்டுள்ளன.
எழுத்து பிறப்பதற்கு முந்தைய நாகரிகமாக ஆதிச்ச நல்லூர் நாகரிகத்தைக் கருத வேண்டும். வரலாற்றுக் காலத்திற்கும், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் இடையிலிருந்த நாகரிகமாகும்.
OSL (Optically Simulated Luminiscence) காலக்கணிப்பு முறையினை மணிப்பூர் பல்கலைக்கழகம் செய்தது. பேராசிரியர் கார்ட்டியா 2006 – இல் இந்திய அறிவியல் மாநாட்டில் அதன் முடிவுகளை வெளியிட்டார். அதன் காலக்கணிப்பானது ஆதிச்சநல்லூரின் கிமு 1500 கிமு 2700 வரை செல்வதாக அவர் வெளியிட்டுள்ளார்.
கரிமக்காலக்கணிப்பில் கிமு 905 மற்றும் கிமு 696 என்று நமக்குக் கிடைத்துள்ளது, தமிழகத் தொல்லியல் எச்சங்களில் நமக்குக் கிடைத்த மிகத்தொன்மையான கால வரையறை இதுவே!
சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒரே இடம் தான்; ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் தாம். இவை இரண்டிற்கும் இடையில் விடுபட்டிருக்கும் கண்ணியாக ஆதிச்ச நல்லூரைக் கருதலாம்


