
தட்டார்மடம் அருகே காணாமல்போன முதியவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (60). கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி செல்வதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. திருநெல்வேலிக்கும் செல்லவில்லை.
அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது குறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் அவரது புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், தட்டார்மடம் காவல் நிலையத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர்.
விசாரணையில் அவர் காணாமல் போன பேச்சிமுத்து எனத் தெரியவந்தது. அவரது உறவினர்களை அழைத்து வந்து அடையாளம் காட்டினர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க்பபட்டது. பேச்சிமுத்து எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.