தொல்காப்பியம் முழுவதையும் மனனம் செய்து, தொடர்ந்து 22 மணி நேரத்தில் எழுதி உலக சாதனை படைத்த விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி உமா மகேஸ்வரிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேரில் சென்று வாழ்த்துகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி உமா மகேஸ்வரி, தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் முழுவதையும் முழுமையாக மனனம் செய்து, 22 மணி நேரம் இடைவிடாது எழுதி உலக சாதனை படைத்துள்ளார். மாணவியின் இந்தச் சாதனைக்குப் பயிற்சி அளித்த தமிழாசிரியை ஜான்சிராணி மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோரின் வழிகாட்டுதல் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மாணவி உமா மகேஸ்வரியின் இந்தத் தமிழ்ச் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்றார். சாதனையைப் பாராட்டி மாணவி உமா மகேஸ்வரி, வழிகாட்டிய ஆசிரியை ஜான்சிராணி மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, சிறப்புப் பரிசுகளை வழங்கிப் கௌரவித்தார்.
இந்தச் சாதனைக்குப் பிறகு பேசிய மாணவி உமா மகேஸ்வரி, தனது உலக சாதனையைக் அங்கீகரிக்கும் வகையில் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்புவதாகக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியர் ராஜசேகர், மகிழ்வோர் மன்ற நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.


