தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலய 25-ஆவது ஆண்டு யூபிலி வெள்ளி விழா, ஆலய புதிய பீடம் அர்ச்சிப்பு விழா, உறுதிப்பூசுதல் விழா என முப்பெரும் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இம்மாபெரும் முப்பெரும் விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு, ஆலயத்தின் புதிய பீடத்தைத் திறந்து வைத்துப் புனிதப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆயர் தலைமையில் முப்பெரும் விழா சிறப்புச் சங்கீதக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியைத் தொடர்ந்து கத்தோலிக்கச் சிறுவர், சிறுமியர், பெரியவர்களுக்குத் திருச்சபை விதிகளின்படி உறுதிப்பூசுதல் வழங்கப்பட்டது.
முன்னதாக முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணிக்குப் பங்குத்தந்தை செல்வன் பர்னாந்து சால்வை அணிவித்து அதிகாரப்பூர்வ வரவேற்பு அளித்தார். அதைத் தொடர்ந்து தமிழர் பண்பாட்டைப் போற்றும் விதமாகப் பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், பாரம்பரிய நாட்டியங்களுடன் பவனியாக ஆயர் ஆலயத்திற்கு உற்சாகமாக அழைத்து வரப்பட்டார்.
இவ்விழா நிகழ்வுகளில் தூத்துக்குடி மறைமாவட்ட குருக்கள், முன்னாள் பங்குத்தந்தையர்கள், மண்ணின் மைந்தர்களான குருக்கள், அருட்சகோதரிகள், திருஇருதய அருட்சகோதரிகள், திரளான இறைமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
210720263முப்பெரும் விழா ஏற்பாடுகள் அனைத்தையும் பங்குத்தந்தை செல்வன் பர்னாந்து தலைமையில், திருஇருதய அருட்சகோதரிகள், பங்கு பணிக்குழுவினர், அன்பியங்கள், பகுதி இறைமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.


