மதுரை விராட்டிபத்தில் செயல்பட்டு வரும் அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்கத்தின் கருத்தரங்கம் மற்றும் 25வது பொதுக்குழுக் கூட்டம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, காக்கிவாடன்பட்டி கிராமத்தில் உள்ள வெங்கடசாமி எலும்பு முறிவு வைத்தியசாலை வளாகத்தில் நடந்தது.
தமிழ்நாடு விவசாய புதிய உத்திகள், கருவிகள் கண்டுபிடிப்பு, மூலிகை செடிகள் விளக்கம் உட்பட பிற வகை இனங்கள் தொடர்பாக செயல்பட்டு வரும் அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டுபிடிப்பாளர்களுக்கான கருத்தரங்கம், புதிய உத்திகள் மற்றும் மூலிகைச் செடிகள் குறித்த விளக்க கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி முதலில் நடந்தது.தலைவர் வெங்கடசாமி அனைவரையும் வரவேற்றார்.
சேவா விவேகானந்தன் தலைமை தாங்கி தொடக்க உரை நிகழ்த்தினார். பிற்பகல் அமர்வில் கோவில்பட்டி மைக்ரோகிரின் வளர்ப்பு செயல்பாட்டாளர் மற்றும் விவசாய கதை எழுத்தாளர் கோ. சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள “இது எங்கள் பூமி” விவசாய நூலின்27 கதைகள் அறிமுகத்தை நம்வழி வேளாண்மை இதழில் ஆசிரியர் பெ. விவேகானந்தன் அறிமுகம் செய்து வாழ்த்தி, பாராட்டி பேசினார்.புளியங்குடி இயற்கை வேளாண் ஆசான் அந்தோணிச்சாமி புத்தகத்தை அறிமுகம் செய்து பாராட்டினார்.
பல உறுப்பினர்கள் புத்தகத்தை பெற்றுக் கொண்டனர். இதன் மொத்த தொகையை சங்கத்தின் செயல்பாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கி நன்றி கூறினார் இது எங்கள் பூமி விவசாய புத்தக ஆசிரியர் கோவில்பட்டி கோ. சுரேஷ்குமார்.அதை தொடர்ந்து சங்கத்தின் 25 வது பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. செயலாளர் காயத்திரி பிரசாத் கலந்து கொண்டு 2025-2026 ஆண்டு செயல்பாடுகளை வாசித்தார். வரவு, செலவு கணக்கை பொருளாளர் சுந்தராஜ் வாசித்து ஒப்புதல் பெற்றார்.புதிய உறுப்பினர் சேர்க்கை, புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு நடந்தது.
அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் மதுரை மேலக்கல் முருகேசன்,ராஜு, நகரம் மாரியப்பன், பெரம்பலூர் கனத்தூர் மோகனகிருஷ்ணன், திருவில்லிபுத்தூர் வைத்திலிங்கபரம் தமிழ்மணி, நவீன அடுப்பு வடிவமைப்பாளர் சென்னை தியாகராஜ், மதுரை பசுமலை சுவாமிநாதன் உட்பட உள்ளூர் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


