
திரு. முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களின் ‘தவழ்ந்து வரும் தாமிரவருணி’ புத்தக அறிமுகம்.
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வுகள் மூலம் தமிழ் பண்பாட்டு தொன்மையினை உலகம் அறிய செய்ய அரும்பாடு பட்ட தமிழ் பண்பாட்டு ஆர்வலர் திரு. முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் எழுதியுள்ள இனிய உரைநடை படைப்பு ‘தவழ்ந்து வரும் தாமிரவருணி’.
பொருணை நதிக்கரை நாகரீகம் வெளிக்கொணர பாடுப்பட்ட நூலாசிரியர் தற்போது அதே பொருணை நதியின் சிறப்புகளை தொகுத்து நம் கையில் ‘தவழ்ந்து வரும் தாமிரபரணி’ எனும் தலைப்பிட்டு வழங்கியிருக்கிரார்.பொதிகை மலையில் தோன்றி காடு சார்ந்த பகுதிகளின் ஊடாக மூலிகை சாறுகளை தன்னகம் கொண்டு, பெருகி பாய்ந்து, மருத நில மக்களின் உணவினை பெருக்கிசெம்மண் தேரிகளின் கரையில் புரண்டோடி நெய்தல் நிலம் புகுந்து கடலில் சங்கமிக்கிறாள் தாமிரவருணி.
பொதிகை மலை சாரலில் உருவான தமிழ் போன்ற பழமையும் பெருமையும் மிக்க தண் பொருணையின் சிறப்பினை விளக்கும் ஒளி விளக்காக திகழ்கிறது இந்த நூல்… இயற்கை ஆர்வலரான நூலாசிரியர் பல காலம் பயணித்த வளம் மிக்க மலை பகுதிகளில் தாம் கண்ட அனுபவம் தொடங்கி மலை சார்ந்த இயற்கை எழில் கொஞ்சும் கானகத்தின் ஊடாக வரும் நதி பிறந்த பகுதிகள் பற்றிய விபரங்களுடன் நதி உருவான புராணம் உள்ளடக்கிய விபரங்களுடன் தொடங்குகிறது நூல்.
குளுமை நிறைந்த கானக பகுதியில் தாம் கண்ட பாண்டியன் கோட்டை தொடங்கி காட்டினை கடவுளாகக்கொள்ளும் காணி நில மக்களின் மாண்பினையும் விவரிக்கிறார் ஆசிரியர். பன்னெடும் காலமாக மக்களின் பண்பாட்டு வெளிப்பாடான விழாகளின் விபரங்களுடன், நதி மக்கள் வாழ்வுக்கு வழங்கி வரும் கொடைகளும் விபரமாக விளக்கம் பெற்றிருக்கின்றன.
நதி தான் தவழ்ந்து செல்லும் இடமெல்லாம் மானிட மாண்பை மேம்படுத்தும் காரணியாக திகழ்ந்து மக்கள் நாகரீக பெருமைகளை எவ்வாரெல்லாம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று விவரிக்கப்படுகிறது. நதி ஓடும் பகுதிகளில் நிறைந்துள்ள படித்துறைகள் மண்டபங்கள் கல்வெட்டுக்கள் பாலங்கள் கலைக்கோவில்கள் உட்பட பல நுணுக்கமான விபரங்களும் பல்வேறு தலைப்புகளில் விளக்கம் பெற்றுள்ளன.
காடு செழித்தால் நாடு செழிக்கும் எனும் அடிப்படை கோட்பாட்டை அன்றே அறிந்து காடு அழிப்பை தடுத்து நதியின் நீர் பெருக்கை உறுதி செய்த ஆங்கில ஆட்சியாளர்களின் சிறப்புகள் எடுத்து இயம்பப்பட்டுள்ளன. எவ்வாறெல்லாம் நதியின் பயன் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வகையில் குளங்கள் கால்வாய்கள்வெட்டி அணைகள் கட்டி நீர்மின் அற்றலும் பெற அனைத்து ஏற்பாடுகளையும் ஆட்சியாளர்கள் எவ்வாறு செய்தார்கள் என நமக்கு அறிய தருகிறார் ஆசிரியர்.
பொருணை நதி கரை நாகரீக கூறுகளை வெளிக்கொணர ஆர்வம் கொண்ட நூலாசிரியர் பிற்கால வரலாற்று சமூக மாற்றம் விவசாய மாற்றம் பற்றி விவரிப்பதோடு தற்கால போராட்டம் பற்றியும் விவரிக்கிறார்.தாமிரவருணி நதியோரம் இருக்கும் ஆலயங்கள் தமிழ் வளர்த்த மடாலயங்கள் மற்றும் மகான்கள் பற்றியும், நதி கடலில் கலக்கும் பகுதியில் இருந்த துறைமுகம் மற்றும் முதல் தமிழ் அச்சகம் உட்பட பல விபரங்களும் விவரிக்கப்பட்டுள்ள.
தாமிரபரணியின் பெருமையினை விவரிக்கும் ஆசிரியர் இன்று நதி அடைந்துள்ள கதியினையும் விவரிக்கிறார். முறையற்ற மணல் திருட்டு பலபடுத்தப்படாத ஆற்றோரம், நீருரிஞ்சும் ஆலைகளின் பெருக்கம், குடிநீரை கொடிய நீராக்கும் சாக்கடைக் கலப்பு, நெகிழிகள் நிறைந்த குப்பைகிடங்காக மாறி வரும் படித்துறைகள் போன்றவை எவ்வாறு நதியின் மேன்மையினை குறைகிறது என்பதையும் விளக்கமாக குறிப்பிடுகிறார்.
நதியின் சிறப்பையும் இன்று அது அடைந்துள்ள துயரமிகு நிலையினையும் விவரிக்கும் ஆசிரியர், நதியின் நிர்வளம் பெருகி சிறப்புடன் திகழ்வதற்கான பல்வேறு திட்டங்களையும் முறையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். அத்துடன் விவசாய அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டால் சிறப்புடன் திகழும் என்பதை சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி வரும் பேய்குளத்து நிலச்சுவான்தார்கள் மற்றும் விவசாயிகள் அபிவிருத்தி சங்க வரலாறு மூலம் சமர்ப்பிக்கிறார். ஒரு நதியின் வளம் காடும் நாடும் செழிக்க செய்வதுடன், அங்கு வாழும் பறவைகள் சிற்றினங்கள் என பல்வேறு உயிரினங்களும் பல்கி பெருக அரண் செய்கிறது என்றும் விபரமாக குறிப்பிடுகிறார்.
பொதிகை மலை உச்சி எனும் குறிஞ்சி நிலத்தில் தோன்றி முல்லை நிலக்காடுகளுள் புகுந்து நெல்லை தூத்துக்குடி மாவட்ட மருத நிலம் வழியாக செம்மண் தேரிகளான பாலை நிலக்கரையோரம் ஓடி நெய்தல் நிலம் தேடி பல்வேறு பிரிவுகளாக பிரிந்து 128 கிலோமீட்டர் (80 மைல்) பயணித்து மன்னார் குடா சங்கு முகத்தில் கடலில் சங்கமிக்கும் தாமிரவருணி பற்றிய இந்த தமிழ் நூல் தமிழர்கள் அனைவரும் போற்றி பாதுகாக்கும் படைப்பாக திகழ்கிறது.
தமிழ் பண்பாட்டு விழுமியங்களை வெளிக்கொணரும் ஆர்வம் மிக்க வரலாற்று ஆர்வலர் திரு. முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள், தம் பட்டாறிவு மூலம் பெற்ற விபரங்கள் அனைத்தையும் இது போன்ற நூல் பதிவுகளாக வெளிக்கொணர்வது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயன் தரும் செயலாகும். அவ்வகையில் திரு. முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்த நூல் அறிமுகம் நிறைவு பெறுகிறது.
இந்த நூலுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பொன்சொர்ணா வெளியீடான இந்த 500 பக்கங்கள் கொண்ட நூல் ரூ. 500/- விலையில் கிடைக்கிறது. நூல் பெற தொலைபேசி: 04630-263917.
கைபேசி: 9442834236.8760970002