தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் பண்ணையாளர்களுக்காக வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு) சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வரும் ஜூலை 7-ஆம் தேதி ‘நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்’ தொடர்பான ஒரு நாள் தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
இக்கல்லூரியின் மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை மூலம் ஒருங்கிணைக்கப்படும் இப்பயிற்சிக்கு, நபர் ஒருவருக்குப் பயிற்சிக் கட்டணமாக ₹300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி முகாமில், வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நன்னீர் அலங்கார மீன் இனங்கள், முட்டையிடும் மற்றும் குட்டி ஈனும் மீன் வகைகளின் மேம்பட்ட இனப்பெருக்க முறைகள், அலங்கார மீன்வளர்ப்பு உபகரணங்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட உள்ளது.
மேலும், அலங்கார மீன்களுக்கான உயிர் உணவுகள் மற்றும் செயற்கை உணவு தயாரித்தல், மீன் தொட்டிகளின் நீர்த்தரக் கட்டுப்பாடு, கண்ணாடித்தொட்டி (Aquarium) அமைக்கும் முறைகள், மீன்களுக்கான நோய் மேலாண்மை, பண்ணை மேலாண்மை மற்றும் அலங்கார மீன்வளர்ப்பின் வழியிலான பொருளாதார வளர்ச்சி குறித்த அனைத்துத் தொழில்நுட்பங்களும் செயல்முறை விளக்கங்களோடு விரிவாகக் கற்பிக்கப்பட உள்ளன.
முன்பதிவு அவசியம்:
இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைத்துப் பயனாளிகளுக்கும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும். இந்தத் தொழில்நுட்பப் பயிற்சியானது தற்போது அலங்கார மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்களுக்கும், இதனைப் புதியதொரு சுயதொழிலாக ஏற்று நடத்த விரும்பும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


