பழமையான புராதன சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தாமிரபரணி கரையோரத்தில் உடைந்த மண்டபங்கள், விவரங்களை தாக்கல் செய்யுமாறும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது
மேற்கு தொடர்ச்சி மலைகளில் 6200 அடி உயரத்தில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 125 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த ஆற்றில் ஓடும் நீரானது குடிநீர், விவசாயம், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கழிவு நீரை அகற்றுவதற்கும் இந்த ஆறு பயன்படுகிறது.
தாமிரபரணி ஆற்றின் இரு கரையிலும், பழமையான மண்டபங்கள், ஏராளமாக உள்ளன. இவை அனைத்தும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இவற்றை முறையாக பாதுகாத்து அடுத்த தலைமுறையிற்கு கொண்டு செல்வது அரசின் கடமை. இவற்றில் பெரும்பாலானவை சீதிலமடைந்து கிடக்கின்றன.
தமிழ் புராணங்களின் கூற்றுப்படி, தாமிரபரணி ஆற்றங்கரையில் 144 தீர்த்த கட்டங்களுக்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது பாபநாச தீர்த்தம், தீப தீர்த்தம்,சால தீர்த்தம், முகுந்த தீர்த்தம்,சிங்க தீர்த்தம்,விஷ்ணு தீர்த்தம்,கஜேந்திர மோட்ச தீர்த்தம்,சுஜேந்திர மோட்ச தீர்த்தம், கர்ம தீர்த்தம் பைரவ தீர்த்தம், பைரவ தீர்த்தம், துர்கா, தீர்த்தம் துர்வாச முனிவர் தீர்த்தம்,மகேந்திர தீர்த்தம், கடனசங்கம தீர்த்தம், உள்ளிட்ட தீர்த்த கட்டங்கள் இருந்தன என்று தாமிரபரணி குறித்த புத்தகங்கள் கூறுகின்றன. இங்கு 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை ” மகா புஷ்கர” திருவிழா கொண்டாடப்படுகிறது.
எனவே தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பழமையான மண்டபங்களையும் படித்துறைகளையும் சீரமைத்து பாதுகாக்கவும் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பழமையான புராதான சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பழமையான மண்டபங்கள் படித்துறைகள் எத்தனை உள்ளன. எங்கே எங்கே உள்ளன பராமரிப்பின்றி கிடக்கும் மண்டபங்கள், படித்துறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து மனுதாரர் தரப்பினர் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கை இரண்டு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்


