தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் சென்று கோப்புகள் மற்றும் அரசுப் பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆட்சியர் விஷு மகாஜன் கயத்தார் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், அங்குள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புப் பிரிவிற்கும் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அறை, பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சார்ந்த கோப்புகள், ஒன்றியக் குழு தலைவர் அறை, ஆணையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார வளர்ச்சி) அறைகளைப் பார்வையிட்டுப் பதிவேடுகளைச் சரிபார்த்தார்.
இதனைத் தொடர்ந்து, கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கரிசல்குளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலகினையும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
அடுத்தகட்டமாக, கயத்தார் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும் சென்ற ஆட்சியர், அங்குள்ள விதை சேமிப்புக் கிடங்கின் இருப்பு விபரங்களை ஆய்வு செய்தார். பின்னர், கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் கயத்தார் கால்நடை மருந்தகத்திற்குச் சென்று, அங்குள்ள மருந்து கலக்கும் அறையைப் பார்வையிட்டு மருந்து இருப்பு விபரங்களைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கயத்தார் வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகம், கயத்தார் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றுக்குச் சென்று மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார். நிறைவாக, அகிலாண்டபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகம் மற்றும் அகிலாண்டபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று செயல்பாடுகளைப் பார்வையிட்டார்.
இந்த அதிரடி கள ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், கயத்தார் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


