தேர்தல் பிரசாரத்திற்காகக் கோவில்பட்டிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ. ராஜுவை ஆதரித்துப் பிரசாரம் செய்ய அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் நேற்று புதன்கிழமை கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவில்பட்டிக்கு வந்தடைந்தார்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியது. அப்போது, அங்குத் தயாராக இருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவுச் சார்பதிவாளருமான மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் ஹெலிகாப்டரைச் சூழ்ந்தனர்.
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப் பணம், பரிசுப் பொருட்கள் அல்லது ஆவணங்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதா என்பது குறித்துத் துணைக் காவல் ஆய்வாளர் தங்கமாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஹெலிகாப்டர் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் பணம் அல்லது பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். சோதனையைத் தொடர்ந்து, அண்ணாமலை அங்கிருந்து கார் மூலம் பிரசாரம் நடைபெறவிருந்த கோவில்பட்டி நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், முக்கிய அரசியல் தலைவர்களின் வாகனங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.


