தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறிய 15 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தூத்துக்குடியில் உள்ள கல்லூரிகளில் பொங்கல் விழா நடந்ததால், மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் விதிகளை மீறி சுற்றித்திரிந்தனர்.
இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேர் பயணித்தது, அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை பொருத்தி இருந்தது, ஹெல்மெட் அணியாதது போன்ற குற்றச்சாட்டுகளில் 15 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்கள் அகற்றப்பட்டன. மேலும் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்டன. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


