திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. பாதயாத்திரை பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக குவிந்தவண்ணம் உள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. காலையில் தை மாதப்பிறப்பு உத்திராயண புண்ய காலத்தை முன்னிட்டு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் பகலில் உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் சுவாமி அலைவாயுகந்தபெருமான் பாரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ரதவீதி சுற்றி, சன்னதித்தெரு வழியாக கோவிலை சேர்கிறார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று முதல் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை நிற மற்றும் காவி நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.


