தூத்துக்குடி-குஜராத் கண்ட்லா துறைமுகம் இடையே கடலோர பசுமை கப்பல் வழித்தடம் உருவாக்கும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று துறைமுகத்தை முழுமையான பசுமை துறைமுகமாக மாற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. அதன்படி காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்னாலை அமைக்கப்பட்டு உள்ளது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் நிலைத்த கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் கண்ட்லா-தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகங்கள் இடையே முதல் கடலோர பசுமை கப்பல் வழித்தடம் உருவாக்குவது தொடர்பாக மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அறிவித்து இருந்தார். அதன்படி கடலோர பசுமை கப்பல் வழித்தடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் தலைமையிலான மூத்த அதிகாரிகள் கொண்ட குழு, குஜராத் கண்ட்லா தீனதயாள் துறைமுக ஆணைய தலைவர் சுசில்குமார் சிங்குடன் ஆலோசனை நடத்தினர்.
இதில் கிரே, கிரீன் மெத்தனால் எரிபொருளில் இயங்கும் கண்டெய்னர் கப்பல்களை அடையாளம் கண்டறிவது, எரிபொருள் நிரப்பும் சேவை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வது, தூத்துக்குடி-கண்ட்லா துறைமுகம் இடையே கடலோர சரக்கு போக்குவரத்துக்கான வாய்ப்புகள் மற்றும் வணிக அளவுகளை மதிப்பிடுதல், கடலோர கப்பல் இயக்கும் நிறுவனங்களை ஒருங்கிணைத்தல், அதற்கான செலவினங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது, முதல் கடலோர பசுமை வழித்தடம் தூத்துக்குடியில் இருந்து அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


