
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சிமெண்ட் பொம்மைகள் சேதமடைந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் கோபுர உச்சியில் இருந்த ஒரு கலசம் சேதம் அடைந்தது.
கோபுரத்தைச் சுற்றிலும் இருந்த சிமெண்டிலான பொம்மைகள் சேதமடைந்து கீழே விழுந்தது.
வியாழக்கிழமை சிவராத்திரியை முன்னிட்டு கோயிலின் உள்ளே இருந்த பத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களும் குழந்தைகளும் இடி மின்னல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சேதமடைந்து கீழே விழுந்து கிடந்த சிமெண்ட் பொம்மைகளை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்து சென்றனர்.