உலக செவிலியர் நாள் உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 இலிருந்து மே 15 வரை 1974 ஆம் ஆண்டிலிருந்து செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.


