மனோரமா (26 மே 1937 – 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார்.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகிய இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ம. கோ. இராமச்சந்திரன் மற்றும் செ. செயலலிதா இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. இவர் காசியப்பன் ‘கிளாக்குடையார்’ மற்றும் ராமாமிர்தம் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசியப்பன் கிளாக்குடையார் மனோரமாவின் தாயாா் ராமாமிா்தம் அவா்களின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்ததால். இதனை அடுத்து கணவருடன் ஏற்பட்ட மனகசப்பால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் அம்மாள் மனோரமவை அழைத்து கொண்டு காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். மனோரமாவை ஆறாம் ஆம் வகுப்பு வரை படிக்கவைத்தார். குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத மனோரமா அங்குள்ள செட்டியார் வீடுகளில் வேலையாளியாக பணி செய்தும். அவர்கள் தாயாருடன் பலகார வியாபாரம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். தனது பனிரெண்டாவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். “பள்ளத்தூர் பாப்பா” என சிறு வயதில் மனோரமா செல்லமாக அழைக்கப்பட்டார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர்.
ஆரம்பத்தில் “வைரம் நாடக சபா” நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது “எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்” சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம், தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார். மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்பு எம். ஆர். ராதா அவர்கள் தனது நாடக சபாவில் நடத்திவந்த ஒரு நாடகத்தை அவரது தம்பி எம்.ஆர்.பாப்பாவுடன் சேர்ந்து படமாக தயாரித்தபோது அதில் ஒரு முக்கிய வேடத்தில் மனோரமா நடித்தும் அந்த திரைப்படமும் பாதியில் நின்றதால் கடைசியாக கவிஞர் கண்ணதாசன் இயக்கிய சொந்த திரைப்படமான மாலையிட்ட மங்கை திரைப்படமே மனோரமாவின் முதல் திரைப்படமாக அமைந்தது.


