உடன்குடி அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதால் 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகள் கொண்ட அனல் மின் உற்பத்தி நிலையத்தைத் தமிழ்நாடு மின்சார வாரியம் 13 ஆயிரத்து 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்தது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2017 டிசம்பர் 7 இல் தொடங்கி, கடந்த மார்ச் 13 ஆம் தேதி அனல் மின் நிலையத்தின் முதல் அலகுப் பணிகள் நிறைவு பெற்றன. அன்று முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு வந்தது.
துவக்கத்தில் 400 மெகாவாட் முதல் 620 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு முழு அளவான 660 மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மின்சார வாரியத் தொழில்நுட்பப் பணியாளர்களால் பழுதுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோளாறுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல் அலகில் இருந்து மீண்டும் 660 மெகாவாட் முழு அளவிலான மின் உற்பத்தி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.


