
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் சேர்மத்துரை(30). இவரது மனைவி மீனா தேவி (28). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சேர்மத்துரை திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணத்தில் உரக்கடை நடத்தி வருகிறார். சேர்மத்துரை தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் பலமுறை மனைவி மீனாதேவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் இனி இதுபோல் நடக்காது என்று கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனாலும் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்வதை வழக்கமாக இருந்துள்ளார். இன்றும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சேர்மத்துரையை மனைவி மீனாதேவி தட்டிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மனைவி மீனாதேவி அருகே கிடந்த கல்லால் கணவர் சேர்மத்துரையை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கணவர் கீழே விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் அவர் இறந்து விட்டார்.
இதையடுத்து மனைவி மீனாதேவி நடந்த சம்பவத்தை திருச்செந்தூர் போலீசில் சென்று கூறினார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த கணவர் சேர்மத்துரையின் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து மது போதையில் தொல்லை கொடுத்த கணவனை மனைவி கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.