இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான திருகோணமலை துறைமுகம் என்பன புராதன பட்டுப் பாதை காலந்தொட்டு இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது. இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும்.] இலங்கை வளமான பௌத்த மரபுரிமையைக் கொண்டு, முதலாவது பௌத்த படைப்புக்களை இத்தீவில் உருவாக்கியது. இந்நாட்டின் தற்கால வரலாறு மூன்று தசாப்த கால ஈழப் போரில் அகப்பட்டுமே 2009 இல் இராணுவ ரீதியிலான வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கை அதிபர் முறைமூலம் குடியரசு மற்றும் ஒற்றையாட்சி அரசால் ஆளப்படும் நாடாகும். கொழும்பு குடியேற்றவாத ஆட்சிக்காலம் முதலே இலங்கையின் தலைநகராக இருந்து வந்துள்ளது. 1977 ஆம் ஆண்டில், இலங்கையின் நிர்வாகத் தலைநகராக அண்மையில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டையை ஆக்கும் பொருட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடம் அங்கே கட்டப்பட்டு, கொழும்பு நகரில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டை தலைநகராக அமைந்துள்ளது. இலங்கை தேயிலை, கோப்பி, இரத்தினம், தெங்கு, இறப்பர், கருவா ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.
இலங்கை “இந்து சமுத்திரத்தின் முத்து” என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படுவதுண்டு. மேலும், இது “புன்னகைக்கும் மக்களின் தேசம்” எனவும் அறியப்படுவதுண்டு. இத்தீவு வெப்பமண்டலக் காடுகளையும் உயர் உயிரியற் பல்வகைமை கொண்ட பல்வேறுவகையான இயற்கை அமைப்பினைக் கொண்டது.
இந்நாடு பன்னாட்டுத் தொடர்பில் நீண்ட வரலாற்றைக் கொண்டது. இது சார்க் ஆரம்ப உறுப்பினரும், ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், ஜி77, கூட்டுசேரா இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினரும் ஆகும். இது ஒன்றே தென்னாசியாவில் “உயர்” மனித வளர்ச்சிச் சுட்டெண் கொண்ட நாடாகும்.
இலங்கையின் முக்கிய நகரங்களாகக் கண்டி, காலி, குருநாகல், அநுராதபுரம், யாழ்ப்பாணம், நுவரேலியா, திருகோணமலை, மட்டக்களப்பு என்பவை காணப்படுகின்றன


