தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ம.பிரபு இடமாற்றம் செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிமைப்பணி துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ள முக்கிய அதிகாரிகளைப் பணியிடமாறுதல் மற்றும் புதிய பணி நியமனங்கள் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வரசாணையின்படி, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ம.பிரபு இடமாற்றம் செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிடத்தில் இருந்த வே.கல்யாண குமார் வயது முதிர்வின் காரணமாகப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ம.பிரபுவை டாஸ்மாக் மதுரை (தெற்கு) மாவட்ட மேலாளராக நியமித்து ஜூன் 12 அன்று வெளியிடப்பட்டிருந்த முந்தைய ஆணை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


