
பெரியதாழை கடற்கரையில் மணல் கொட்டுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு வந்ததை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா பெரியதாழை கடலில் கடல் அரிப்பு காரணமாக தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. தூண்டில் வளைவு காரணமாக கடற்கரையில் மணல் அரிப்பு காரணமாக படகுகள் நிறுத்த முடியாமல் காணப்பட்டது. இதனால் மணல் அரிக்கப்பட்ட இடத்தில் மணல் நிரப்பி படகுகள் நிறுத்த ஏற்பாடு செய்து தர மீனவர்கள் வலியுறுத்தினர். அதன்படி மாவட்ட ஆட்சியர் நிதியில் கடலில் ஒரு பகுதியில் மணலை அள்ளி கரைப்பகுதியில் கொட்டிடும் பணி தொடங்கப்பட்டது.
மணல் அள்ளும் இடம் நெல்லை மாவட்டம் குட்டம் ஊராட்சி பகுதியில் அமைந்ததால் அப்பகுதி மக்கள் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனால் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் கடற்கரையில் படகுகள் நிறுத்த முடியாத நிலை இருந்து வந்ததால் மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனால் மீனவர்கள் இப்பிரச்னையை தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேணடும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ ஆகியோரிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்னன் பெரியதாழைக்கு வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது மீனவர்கள் படகை கரையில் நிறுத்த முடியாததால் தினமும் கூலிக்கு ஆள் வைத்து படகுகளை கரைக்கு கொண்டு வரும் நிலை உள்ளது. ஆதலால் கடற்கரையில் அரிப்பான பகுதியில் மணல் கொட்டி விரைவில் நிரப்பிட வேண்டும் எனவும், படகுகள் நிறுத்திட போதுமான இட வசதியும் இல்லையெனவும். அதனை விரிவு படுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அமைச்சரிடம் மாற்று ஏற்பாடாக மணல் அடித்து படகுகள் நிறுத்தம் இடத்தை அதிகரித்து ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீனவர்களிடம் இப்பிரச்னை நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அப்போது பெரியதாழை பங்குதந்தை சுசீலன், திருச்செந்தூர் ஆர்டிஓ கோகிலா, சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், உதவி பொறியாளர் அருணா, மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலர்கள் ஏ.எஸ். ஜோசப், ஏ. பாலமுருகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எஸ். சுரேஷ்குமார், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் து. சங்கர், எம்எல்ஏஉதவியாளர் சந்திரபோஸ், தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஏ. லூர்துமணி, மாவட்ட மீனவரணி தலைவர் சுரேஷ், மாநில திமுக பொதுக்குழ உறுப்பினர்கள் பசுபதி, இந்திரகாசி, மாவட்ட திமுக பிரதிநிதிகள் சந்தியாகு, சித்திரை, ஊராட்சி திமுக செயலர் ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.