கருங்குளம் மலை அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அழகிய நடைபாதையுடன் பூங்கா அமைக்கப்படும் என முன்னாள் சப்கலெக்டர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்த திட்டம் பாதியில் கிடப்பில் போடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க கடந்த 2017 ஜுன் மாதம் தூர் வாரும் பணிகள் பல நடந்தது. இதில் கருங்குளம் வகுளகிரி மலை அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளம் தூர் வாரும் பணியும் துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் தலைமை வகித்தார். துணை தாசிலர்தார் முருகேசன், ஜஸ்டின், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மேலாளர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப் கலெக்டர் தீபக் ஜேக்கப் பணியை துவக்கி¬ வத்தார். அப்போது அவர் கூறும் போது,
கருங்குளம் கோயில் நகரமாகும். இங்கு பக்தர்களும் வெளிமாவட்ட மாநில யாத்திரியர்களும் அதிகமாக வந்து செல்கிறார்கள். எனவே கருங்குளம் வகுளகிரி மலை அடிவாரத்தில் உள்ள இந்த தெப்பக்குளம் முழுவதுமாக தூர் வாரப்படுகிறது. அமலை செடிகள் அகற்றப்படுகிறது. நாலுபக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டு, தெப்பக்குளத்தினை சுற்றி வர நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தெருவிளக்கும் அமைக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வசதியும் செய்து தரப்படும். மேம்படுத்தப்பட்ட இந்த பூங்காவை பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும், மேலும் இங்கிருந்து அள்ளப்படும் கரம்பை மண் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. என்று அவர் கூறினார்.
ஆனால் துவக்கி வைக்கப்பட்ட அந்த பணி இரண்டு வருடங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. தூர் வாரப்படும் போது எப்படி இருந்ததோ அதுபோலவே தற்போதும் இந்த குளம் உள்ளது. செடிகள் அகற்றப்படவில்லை. நடைப்பயிற்சி பூங்கா அமைக்கப்படவில்லை. மேலும் தடுப்பு சுவரும் அமைக்கப்படவில்லை. இதனால் சாலை ஓரத்தில் எப்போது விபத்து நடைபெறும் என கேள்வி குறியுடன் இந்தகுளம் உள்ளது.
தற்போது மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி குளங்களை பராமரிக்க திட்டங்களை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். ஒரு ஊர் கை நூரு என்ற திட்டத்தின் கீழ் இன்று முத்தாலங்குறிச்சி குளத்தினை பராமரிக்க மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி வருகை தருகிறார். இவர் கருங்குளம் கிராமத்தில் உள்ள இந்த குளத்தினையும் பராமரிக்க ஆணையிடுவார் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


