ஆதிச்சநல்லூர் பாலம் அகலப்படுத்தபடவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை – திருச்செந்தூர் மெயின் ரோடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சாலை போக்கு வரத்து நிறைந்தது. இங்கு பயணிகள் மிக அதிகமாக பயணம் செய்கிறார்கள். மாதந்தோறும் நடைபெறும் திருச்செந்தூர் முருகன்கோயில் பூஜைக்கு இந்த சாலை வழியாகத்தான் பாதயாத்திரையாக லட்சகணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள்.
தைபூசம், புத்தாண்டு, மாசி மகம், சித்திரை வருடபிறப்பு, வைகாசி விசாகம் என தொடர்ந்து நடைபெறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு மிக அதிகமாக வாகனங்கள் இந்த வழியாத்தான் சென்று வருகின்றன.
செய்துங்கநல்லூர் & ஸ்ரீவைகுண்டத்துக்கு இடையே ஆதிச்சநல்லூர் பரப்பு பகுதியில் குறுகலான பாலம் ஒன்றுள்ளது. இந்த பாலம் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆதிச்சநல்லூர் பரம்பு தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு இங்கு அவர்கள் அனுமதி யின்றி சாலையை விரிவு படுத்த இயலவில்லை. எனவே மிகவும் குறுகலான இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து வெள்ளூர் கண்ணன் கூறும் போது, ஆதிச்சநல்லூர் பரம்பு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் இந்த பாலம் அகலப்படுத்தப்படாமலேயே இருந்தது. தற்போது இந்த பாலத்தினை விரிவு படுத்த தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் பணி துவங்கியதாக தெரியவில்லை. அதற்கான ஆரம்ப கட்ட வேலை கூட நடைபெறவில்லை. எனவே உடனடியாக பாலத்தினை அகலபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகமான போக்குவரத்து கொண்ட, அடிக்கடி விபத்து ஏற்படும் ஆதிச்சநல்லூர் பாலத்தினை விரிவு படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


