தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலை வளாகத்தில் செடிகள் வைத்துப் பராமரிப்பதற்கான தண்ணீர் வசதி மற்றும் செயற்கை நீரூற்று அமைத்துத் தருமாறு நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் தாமோதரன், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஸ்டீபன் ஜெயராஜ், கௌரவ தலைவர் துரை, கௌரவ ஆலோசகர் மதிவாணன் ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து இக் கோரிக்கையை விடுத்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, அம்பேத்கர் சிலை அமைந்துள்ள பகுதியில் செடிகள் வைப்பதற்காகத் தண்ணீர் வசதியை உடனடியாகச் செய்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், வரும் நாட்களில் அங்குச் செயற்கை நீரூற்று அமைத்துத் தரப்படும் என்றும் நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகளிடம் அவர் உத்தரவாதம் அளித்தார். இச்சந்திப்பின் போது துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


