திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான கால்நடைத்துறை மருத்துவக்குழுவினர் வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தெய்வானை யானை, கடந்த 2024 ஆம் ஆண்டு பாகன் உட்பட இரண்டு பேரைத் தாக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, அன்று முதல் யானையின் உடல்நலன் மற்றும் குணநலன்கள் குறித்துத் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. யானை சரியாக உணவு உட்கொள்கிறதா, அதன் நடத்தையில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதைக் கண்காணிக்க வன கால்நடை மருத்துவக்குழுவினர் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
வனத்துறை சார்பில் மாவட்ட வளர்ப்பு யானைகள் நலக்குழு மூலம் 3 மாதத்திற்கு ஒருமுறை யானையின் உடல் ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இத் திட்டத்தின்படி நடத்தப்பட்ட ஆய்வில் திருச்செந்தூர் கோவில் தெய்வானை யானை முழு உடல் ஆரோக்கியத்துடன் நலமுடன் உள்ளது என மாவட்ட வன அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
யானைக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் முறையான ஆரோக்கியமான உணவுகளும் பழங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் யாரும் யானைக்கு நேரடியாகப் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கக் கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது. நேரடியாக உணவு வழங்குவது யானையின் உடல்நலனுக்கு உகந்தது அல்ல என்பதால், பக்தர்கள் ஏதேனும் உதவிகளைச் செய்ய விரும்பினால் யானை பராமரிப்பு நிதியாகக் கோவில் நிர்வாகத்திடம் நேரடியாகச் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சரவணப்பொய்கை பகுதியில் யானை ஓய்வெடுப்பதற்காகக் கூடுதலாகக் புதிய குடில் ஒன்று அமைக்கப்பட உள்ளது.


