விளாத்திகுளம் அருகே நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக்கோரி 6 கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திக்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்க வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்திக்குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் மந்திக்குளம், ஓ.லட்சுமிநாராயணபுரம், லெக்கம்பட்டி, இலந்தைக்குளம், மீனாட்சிபுரம், கோட்டநத்தம் ஆகிய 6 கிராமங்களைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது இப்பொதுமக்கள் 2 கூட்டமைப்பாகப் பிரிக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அனைத்து வேலை அட்டைதாரர்களுக்கும் முழுமையாக 100 நாட்கள் பணி கிடைக்காமல், வருடத்திற்கு 50-க்கும் குறைவான நாட்களே பணி வழங்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
இந்த நடைமுறையை உடனடியாக முறைப்படுத்தி, வேலை அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் தங்குதடையின்றி முழுமையாக 100 நாட்கள் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பொதுமக்கள் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.


