தூத்துக்குடி சண்முகபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின் சட்டதிட்டங்களின்படி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வளர்ப்புப் பிராணிகளை அதிகாரிகளின் அனுமதி பெற்றுத்தான் வளர்க்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. சாலைகளில் சுற்றித் திரிந்து விபத்துகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் கால்நடைகளை அதிகாரிகள் பிடித்துக் கோசாலையில் அடைத்து, அபராதமும் விதித்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சிப் பகுதி முழுவதும் அச்சுறுத்தலாக உலா வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
குறிப்பாகச் சண்முகபுரம் பகுதியில் அதிகாலை வேளையில் மார்க்கெட்டிற்குச் செல்லும் வியாபாரிகள், பால் மற்றும் நாளிதழ் விநியோகம் செய்பவர்களை இந்த நாய்கள் துரத்திக் கடிக்கின்றன. பல சமயங்களில் நாய்கள் குறுக்கே ஓடுவதால் ஏற்படும் சாலை விபத்துகளால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் இந்த நாய்களின் தொல்லையால் தினமும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது.
மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் அனைத்து வரிகளையும் முறையாகப் பெற்றுக்கொள்கிறது. வரி செலுத்தத் தவறும்பட்சத்தில் கடப்பாரை, மண்வெட்டியுடன் வந்து குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதற்குக் குழி தோண்டும் அதிகாரிகள், மக்கள் நலன் சார்ந்த இந்தத் தெருநாய் பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேடைகளில் மக்கள் நலனே முக்கியம் என்று பேசும் மக்கள் பிரதிநிதிகளும், நோய் பரப்பும் தெருநாய்களின் உலா குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் செயல்படுவதாக அதிருப்தி நிலவுகிறது. எனவே, சண்முகபுரம் பகுதியில் அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்களை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாகக் கண்டறிந்து, உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் அவசரக் கோரிக்கையாக உள்ளது.


