திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஜூன் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.2.96 கோடி ரொக்கப் பணம் மற்றும் 620 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் வசூலாகியுள்ளன.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஜூன் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வாளர் செந்தில்நாயகி மற்றும் பொது மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கோயில் பணியாளர்கள் மற்றும் அயற்பணி ஊழியர்கள் இக்காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உண்டியல் தரம் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் ரொக்கமாக 2 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 122 ரூபாயைக் காணிக்கையாகச் செலுத்தியிருந்தது தெரியவந்தது. ரொக்கப் பணம் தவிர, 620 கிராம் தங்கம், 10,825 கிராம் வெள்ளி, 22,540 கிராம் பித்தளை, 1,430 கிராம் செம்பு மற்றும் 7,240 கிராம் தகரம் ஆகிய உலோகப் பொருட்களும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,502 வெளிநாட்டுப் பணத்தாள்களையும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


