திருச்செந்தூர் அருகே தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியைப் பிடிக்க முயன்றபோது, சப்-இன்ஸ்பெக்டரைத் துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மினிசகாயபுரம் பகுதியைச் சேர்ந்த ‘ஆர்க்’ என்ற மரிய அந்தோணி (35), ஒரு பிரபல ரவுடி ஆவார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி என 29-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த இவர், திருச்செந்தூர் அருகே சோனகன்விளை காணியாளன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மதியம் மரிய அந்தோணியை அந்த வீட்டில் வைத்து சுற்றி வளைத்தனர். அப்போது காவல்துறையிடம் சிக்காமல் இருக்க மரிய அந்தோணி கத்தியால் தனது கழுத்தை வெட்டித் தற்கொலைக்கு முயன்றார். அவரைத் தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவை நோக்கி, மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் மரிய அந்தோணி சுட்டார்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் காயமடையவே, தற்காப்பிற்காக அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரிய அந்தோணியின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த மரிய அந்தோணி பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, திருச்செந்தூர் தாலுகா போலீசார் மரிய அந்தோணி மீது பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல் அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


