தூத்துக்குடியில் புகழ்பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதப் பெருந்திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (ஏப்ரல் 21) காலை தொடங்கியது.
இன்று காலை 7.15 மணிக்கு கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 10.45 மணி முதல் 11.10 மணிக்குள், நந்தீஸ்வரர் முன்புள்ள கொடிமரத்தில் முறைப்படி கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, சுப்பிரமணியசாமி மகமை அறக்கட்டளை செயலாளர் எம்.எஸ்.எஸ்.கந்தப்பன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கோவில் பிரதான பட்டர்களான செல்வம், சண்முகம், குமார், சுப்பிரமணியன் மற்றும் சோமா கந்தன் ஆகியோர் பூஜைகளை முன்னின்று நடத்தினர்.

கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் முக்கியப் பிரமுகர்கள், பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இன்று இரவு 8 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சிம்மம், பூதம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 30-ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


