தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.1.30 கோடி ரொக்கம் மற்றும் ரூ.38 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று (19.04.2026) வரை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பின்வரும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன:
மொத்த ரொக்கத் தொகை: ரூ.1,30,18,618
பொருட்களின் மதிப்பு: ரூ.38,24,162
மதுபானங்களின் மதிப்பு: ரூ.5,82,878
விடுவிக்கப்பட்ட தொகை: பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.87,14,968 ரொக்கத் தொகையானது, சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் உரியவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் நாள் வரை இந்தக் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


