தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 209 சப்-இன்ஸ்பெக்டர்களை மாவட்டத்தை விட்டு வெளியே இடமாற்றம் செய்து, நெல்லை சரக டி.ஐ.ஜி முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
தமிழக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட அளவிலான அதிகாரிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் தங்களது சொந்தத் தொகுதியிலோ, அல்லது ஒரே தொகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றி இருந்தால், அவர்களை மாவட்டத்திற்குள்ளேயே வேறு தொகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 209 சப்-இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், அதேபோல் வெளி மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அண்மையில்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவின்படி, வெளி மாவட்டங்களுக்கான இடமாற்ற உத்தரவை ரத்து செய்யுமாறு தென்மண்டல ஐ.ஜி, அனைத்துக் காவல் ஆணையர்கள் மற்றும் டி.ஐ.ஜி-க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக, வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து அதே இடத்திலேயே பணியாற்றி வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


