சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு கிராமத்தில் வ.உ.சிதம்பரம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (அலகு 70) அய்யனடைப்பு கிராமத்தில் பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முக்கிய நிகழ்வாக, திட்ட அலுவலர் செல்வம் தலைமையில் மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மேற்கொண்டனர்.
ஜனநாயகக் கடமையான வாக்களிப்பை 100% உறுதி செய்தல், வாக்களிக்கப் பணம் வாங்குவதைத் தவிர்த்தல், தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு, வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


