தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04.03.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய “தோழி” விடுதிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு குழந்தைகள் இல்லக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
பணிபுரியும் மகளிரின் பாதுகாப்பான தங்குமிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய இடங்களில் ரூ.10.38 கோடி செலவில் தலா 50 பெண்கள் (மொத்தம் 100 பேர்) தங்கும் வகையில் இந்த விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, நேர்காணல், உயர்கல்வி மற்றும் பயிற்சிக்காக நகரங்களுக்கு வரும் பெண்களும் குறுகிய காலம் தங்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில் நவீன வசதிகள் குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன: தற்போது தமிழகத்தின் 19 மாவட்டங்களில் 23 “தோழி” விடுதிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும், ரூ.220.87 கோடி மதிப்பீட்டில் 2,540 பெண்கள் தங்கும் வகையில் 22 புதிய விடுதிகள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லம்:
தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. 1,649 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்துடன் 100 சிறுவர்கள் தங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ அறை, உணக்கூடம், ஆற்றுப்படுத்துனர் அறை மற்றும் பல்நோக்குக் கூடம் உள்ளன. 592 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன பூப்பந்து (Badminton) உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் . பி. கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், முதன்மைச் செயலாளர் . ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


