தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் கண்காணிப்பாளராக மதன் நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தில் மூன்று முக்கிய காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (13.02.2026) அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.
மேலும், திருநெல்வேலி மாநகர தலைமையிட துணை ஆணையராகப் பணியாற்றி வந்த எஸ்.விஜயகுமார், திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகுமார் வகித்து வந்த ‘தலைமையிட துணை ஆணையர்’ பணியிடத்தை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் கூடுதலாகக் கவனிப்பார் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


