தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை சங்க புதிய தலைவராக எஸ்டிஆர் அபிஷேக் பொன்சீலன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை சங்கத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்க்கும் விழா தூத்துக்குடி மாநகர், எட்டயபுரம் சாலையில் உள்ள எஸ்டிஆர் ரெஸ்டாரண்டில் வைத்து நடைபெற்றது.. சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி காவல் உதவி ஆணையர் சுரேஷ், திமுக சிறுபான்மை பிரிவு மாநில இணைச் செயலாளர் பொன்சீலன், தமிழ் மாநில காங்கிரஸின் மாநகர் மாவட்ட தலைவர் விஜயசீலன், மத்திய மாவட்ட தவெக செயலாளர் சாமுவேல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து சங்கத்தின் புதிய தலைவராக எஸ்டிஆர் அபிஷேக் பொன்சீலன் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த வருடம் குத்துச்சண்டை போட்டியில் சாதித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் குத்துச்சண்டை மேடை அமைப்பது பற்றி தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்று கொண்ட எஸ்டிஆர் அபிஷேக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும் போது, 2008 இல் இருந்து குத்துச்சண்டை வீரராக இருந்திருக்கின்றேன். பொருளாதார ரீதியாக ஏழ்மையில் இருக்கும் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த பதவிக்கு வந்திருக்கின்றேன். தூத்துக்குடியில் 400 வீரர்கள் இருக்கின்றார்கள். ஆனால், 11 மெடல் தான் பெற்று வெற்றி பெற்றுள்ளோம். பெற்றோர்கள் இந்தப் போட்டியில் அவர்கள் குழந்தைகளை சேர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பாதுகாப்பான போட்டி தான்., இதனை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய பணி. குத்துச்சண்டை போட்டி ஒலிம்பிக்கில் இருந்தும் தூத்துக்குடியில் குத்துச்சண்டை பயிற்சி பெற ஒர் மைதானம் இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களும், ஏழை எளிய தகுதி உள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும்.
போட்டியில் மெடல் வாங்கினால் அரசு பணி காத்து கொண்டு இருக்கிறது. இதனையும் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி குத்துச்சண்டை போட்டியை ஊக்கப்படுத்த இருக்கின்றோம் என்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


