உடன்குடி அருகே குடும்பத் தகராறில் மைத்துனர் உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி காலன் குடியிருப்பு சாயக்காரத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்து கணேஷ் (24). வெல்டிங் தொழிலாளி. இவரது சகோதரி ஐஸ்வர்யா, காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கார்த்திக் (32) என்பவரை திருமணம் செய்து அப்பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு, பெண் குழந்தை உள்ளது.
இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததால், கார்த்திக் மற்றும் பெண் வீட்டாருக்கு இடையேயும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக, ஐஸ்வர்யா தனது அண்ணன் முத்து கணேஷை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அங்கு வந்த ஐஸ்வர்யாவின் தந்தை முருகன், தாய் மாரியம்மாள், அண்ணன் முத்து கணேஷ், உறவினர் சண்முக சுந்தரம் ஆகியோர் கார்த்திக்கை தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பினரிடையே கைகலப்பு எற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கார்த்திக் அரிவாளால் முத்து கணேஷை வெட்டியுள்ளார். தடுக்க வந்த சண்முக சுந்தரத்தையும் வெட்டியுள்ளார்.
இருவரையும் உறவினர்கள் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து, முத்து கணேஷ் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்திக்கை கைது செய்து, திருச்செந்தூர் நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


