திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த கீழநாலுமூலைக் கிணறில் உள்ள பூரண, புஷ்கலா தேவி சமேத குன்றுமேலய்யன் என்ற மெய்கண்டமூா்த்தி சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த 8, 9ஆம் தேதி பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், அங்குராா்ப்பணம், முதல் கால யாகசாலை பூஜை, புதன்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
வியாழக்கிழமை (ஜூலை 11) காலை 7.30 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 4ஆம் கால யாகசாலை பூஜை, இரவில் 5ஆம் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. தொடா்ந்து, நாளை வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு யாக சாலையில் புண்யாக வாசனம், விசேஷ சந்தி, மூல மந்திர ஹோமம், 7.30-க்கு பரிவார மூா்த்திகளுக்கு பூா்ணாஹுதி தீபாராதனை, 8 மணிக்கு கும்பம் எழுந்தருளல், 8.30-க்கு ஸ்பா்சாஹுதி தீபாராதனை நடைபெறுகிறது. அதையடுத்து, 9.15 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30-க்கு விமான அபிஷேகம், 10 மணிக்கு குன்றுமேலய்யன் சாஸ்தா, பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், நண்பகல் 12.30-க்கு மகா அபிஷேக தீபாராதனை நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. விழா நாள்களில் நாள்தோறும் 3 வேளையும் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அருள்முருகன், இணை ஆணையா் காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில்முருகன், சாஸ்தா சேவா சங்க பக்தா்கள் செய்து வருகின்றனா்.


