2024ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளரச்சித் துறையால் 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள் கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அது தொடர்பான விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து
தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு 12.08.2024ஆம் நாளுக்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு “தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தூத்துக்குடி (தொலைபேசி எண்.0461-2341499)” என்ற முகவரிக்கு நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


